Main Menu

திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நாளை?

திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.  அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மதிமுக,  கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.  இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து திமுக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.  இரண்டு இடதுசாரி கட்சிகளும் பேச்சுவார்த்தையில் இணக்கமாக அமைந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021 பொது தேர்தல்களில் 61 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 7.35 சதவீதம் முதல் 9.62 சதவீதம் வாக்கு பெற்றுள்ளதால் மக்கள் நீதி மய்யத்திற்கு குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என ம.நீ.ம கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல காங்கிரஸ் கட்சியுடன் ஓரிரு நாளில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ளது.  ஒரு வாரத்திற்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதி பங்கீடை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.  மார்ச் 2 வது வாரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்காண நேர்காணலை நடத்தவும் அக்கட்சி முடிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பகிரவும்...