Main Menu

தற்போதைய கால கட்டத்தில் கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்து – சாந்தி சிறிஸ்கந்தராஜா

வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா   கனகராயன்குளம் மகாவித்தியாலத்தில் 17.7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள், அதிபர் விடுதிகள் மற்றும் பாடசாலை சிற்றுண்டிசாலை என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்றையதினம் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர்,

தற்போதைய காலகட்டத்தில்  கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்தாக இருக்கிறது. எதிர்கால சந்ததியை வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும் வளர்த்தெடுப்பதற்கு ஒழுக்கத்துடனான கல்வி எமக்கு அவசியமாக இருக்கிறது. 

இன்று இலங்கையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சிமுறை அல்ல மாறாக பிக்குவினுடைய ஆட்சியே என்பதை, நீராவியடி பிள்ளையார், ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் எமக்கு வலியுறுத்தி இருக்கிறது. நீதி,நியாயம் இந்த இலங்கையிலே செத்துவிட்டது. இங்கு நடைபெறுவது காட்டாட்சி. போரில் தோற்ற பின்னர் கடந்த 10 வருடமாக எமது நிலத்தை விடுவியுங்கள், ஆக்கிரமிப்புக்களை நிறுத்துங்கள் என்று நாம் போராடிவரும் நிலையில் எமது கோரிக்கைகள் புறம்தள்ளபட்டுவந்த நிலையில் இன்று நாட்டின் சட்டவாளருக்கே பிக்கு  தாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பிக்குவை காப்பாற்றுவதற்காக பொலிஸ் அதிகாரி பாடுபடுவதையும் எனது கண் முன்னே கண்டேன். 

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதி மன்ற தீர்ப்பினை செயற்படுத்துவதற்கு இயலாது போன பொலிசார் மற்றும், அட்டகாசம் புரிந்த பிக்குகள் கைதுசெய்யப்படும் வரை தேர்தல் நோக்கத்திற்காகவோ, அல்லது தேர்தல் பிரசாரத்திற்காகவோ எந்த ஒரு அரசியல் வாதியும் இந்த வடக்கு நோக்கி வரக்கூடாது என்பதை எமது மக்கள் சார்பாக நான் தெரிவித்து கொள்கின்றேன். 

வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நீதி நியாயத்தை நிலைநாட்டி ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் அனைவரும் செயற்படவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன். என்றார்.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  வடக்கு பிரதசேசபை தலைவர் இ.தணிகாசலம், வவுனியா வடக்கு வலயகல்வி பணிப்பாளர் சு.அன்னமலர், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பகிரவும்...