Main Menu

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: வைகோ

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுவந்த ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்த மே 18ஆம் நாளின் 11 வருட நிறைவு நெருங்கியுள்ள நிலையில் வைகோ இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடான கோடி தமிழர்களின் நெஞ்சில் இரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நாட்களாகும்.

தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கை தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் பகுதிக்குள் வராத சிங்களவர்களின் அதிகார நுகத்தடியில் தமிழர்களைச் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை கேட்டனர். ஆனால், அவர்கள் நாலாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். ஈழத்துக் காந்தி தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டனர்.

தமிழர்கள் நடத்திய அறப்போராட்டத்திற்குப் பரிசாக, துப்பாக்கிச் சூடு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என்பவைதான் நடைபெற்றன.

தமிழர்கள் தொடர்ந்து வதைக்கப்பட்ட காரணத்தால், ‘சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு’ என்று வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் தீர்மானம் எடுத்தனர். இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா பிரகடனம் செய்தார்.

அதையொட்டித்தான் உலகில் எவரும் இதுவரை கண்டும், கேட்டும் இராத நிகரற்ற சாகசங்கள் நிறைந்த யுத்தத்தை பிரபாகரன் முன்னெடுத்தார். உலகத்தில் தாயக விடுதலைக்காக ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஆயுத உதவிகள் கிடைத்தன.

எந்த உதவியும் இல்லாமல் தரைப்படை, கடல் படை, விமானப் படை அமைத்து வெற்றி மேல் வெற்றிகளை தமிழர்கள் குவித்துவந்த நேரத்தில், சிங்களவர்களுக்கு உலக நாடுகளின் ஆயுதங்கள் கிடைத்தன.

இப்படி படுகொலைகள் நடைபெற்ற வேளையில், உலகத்தின் நீதி கிடைக்காதா? நாதி கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் மே 17, 18 ஆகிய திகதிகளில் இலட்சக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதற்கு நீதி வேண்டும் என்று இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகிறோம்.

தமிழர்கள் நாதியற்றவர்களா? எங்களுக்கு நீதி கிடையாதா? இலட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 90 ஆயிரம் பெண்கள் இன்றைக்கு கணவர்களை இழந்திருக்கிறார்கள்.

மனிதகுலத்தின் நீதிமன்றமாகக் கருதுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நீதி கேட்கிறோம். என்ன நீதியைக் கேட்கிறோம்? காணாமல் போன தமிழர்கள் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட வேண்டும். சிறைப்பட்டத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர்களின் காணிகளை, நிலங்களை அபகரித்துக்கொண்டு இராணுவத்தைக் கொண்டுபோய் குடியேற்றி இருக்கிறார்கள். அந்த நிலங்கள் மறுபடியும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றே கேட்கிறோம்.

எனவே, தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...