Main Menu

தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடுகளை தளர்த்தினால், கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை என்றாலும், உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பார்சல் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பகிரவும்...