Main Menu

சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!

உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமாக கூறப்படும் தாஜ்மஹால் மூடப்பட்டது.

பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. தாஜ்மஹால் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதுபோல ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

எனவே தாஜ்மஹாலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று ஏராளமானோர் தாஜ்மஹாலுக்கு வந்தனர். இணையம் மூலம் தைவான் நாட்டைச் சேர்ந்த 160 பேர் இன்று தாஜ்மஹாலை சுற்றி பார்க்க முன் பதிவு செய்திருந்தனர்.

இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை தாஜ்மஹாக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக அவர்களை பிரித்து இடைவெளிவிட்டு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

தாஜ்மஹாலுக்குள் நுழையும் முன்பு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்துகொள்ள ஒவ்வொருவரும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்தனர்.

ஒரேநேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வழக்கம்போல தாஜ்மஹாலுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1965, 1971-ம் ஆண்டுகளில் போர்கள் காரணமாக தாஜ்மஹால் மூடப்பட்டிருந்தது. ஆனால் இம்முறையே நீண்ட நாட்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...