Main Menu

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி – வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 2 கோடியே 94 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 9 இலட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதைவிட, அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

இந்நிலையில் சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை அடைந்துவிட்டதாகவும், அதில் மூன்று தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்த மையத்தின் தலைமை வல்லுநர் குய்சென் வூ கூறுகையில், சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசியொன்று கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு போடப்பட்டதாகவும் அதன்பிறகு மோசமான பக்கவிளைவுகளோ அல்லது அறிகுறியோ தனக்கு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்த தடுப்பூசியின் பெயர் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...