Main Menu

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை!

ஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவமானது பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஷ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரித்தானிய கொடியுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை விடுவிக்க தவறினால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனவும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவிற்கு மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை சிறைப்பிடித்தது.

இதன்காரணமாக கோபமடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த குற்றச்சாட்டுக்களை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதி அரேபியா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது.

இந்தியா, ரஷ்யா, வாத்விய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 23 ஊழியர்கள் இதில் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பகிரவும்...