Main Menu

சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிப்புச் சம்பவம் – 31 வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரச படை வான்வழி தாக்குதல் நடத்துவதில் ஷாய்ரத் விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அங்கு உள்ள களஞ்சியம் ஒன்றில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆயுதக்கிடங்கில் இருக்கும் காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த தருணத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு பயங்கர வெடி விபத்து இடம்பெற்றது. களஞ்சியத்தில் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். சக வீரர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிரிய ராணுவம் இரசாயன தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி ஷாய்ரத் விமானப்படை தளம் மீது அமெரிக்க படை அதிரடி வான்தாக்குதல் நடத்தியதில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தமை நினைவு கூரத்தக்கது.

பகிரவும்...