Main Menu

சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய மியன்மார் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மியன்மாரில் இராணுவம் ஊடாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஆட்சி நடைபெறுகின்றது.

இவ்வாறு மியன்மாரின் அரங்கேறிய இராணுவமயமாக்கல் சர்வாதிகார வெறிக்கு மத்தியில் இலங்கை வெளியுறவு அமைச்சர், பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை அழைத்து கடிதம் எழுதியுள்ளார்.

அதாவது, சர்வதேச உறவுகள் பற்றிய போதிய அறிவு இல்லாத காரணமாகவே அரசாங்கம் இத்தகைய தவறை செய்துள்ளது என நான் நினைக்கிறேன்

மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பகிரங்கமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியதே சரியான செயற்பாடாகும்.

ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் மீண்டும் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சி முன்னெடுக்கப்படுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் குறைந்தது ஒரு நிலைப்பாட்டையேனும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதற்கு பதிலாக, மியன்மாரில் இடம்பெறுகின்ற இராணுவமயமாக்கலை தற்போதைய இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதன் காரணமாகவா அமைச்சர் தினேஷ் குணவர்தன அந்நாட்டு இராணுவ பிரதிநிதிக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு அழைப்பு விடுப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

இதனை சிறு பிள்ளைத்தனமான ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். எனவே விடுக்கப்பட்ட அழைப்பினை துரிதமாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மேலும் மியன்மாரில் இடம்பெறுகின்ற இராணுவமயாக்கல் செயற்பாடுகளை ஜனநாயக நாடு என்ற ரீதியில் இலங்கை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்க  வேண்டும் என்றும் கோருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...