இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தனது வருகை குறித்து மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை மேலும் உறுதிப்படுத்தி, அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், இருநாடுகளின் பொதுவான பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தி பொருளாதாரச் செழிப்பை முன்னெடுத்துச் செல்லவும் தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த உயர் நியமனத்திற்கு முன்னதாக, இவர் நார்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடைக்காலப் பொறுப்புத் தூதுவராகவும், அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
