Main Menu

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும்  தமக்கு ஆதரவு தெரிவுக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைக்கு அமையவும்  புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேட்பாளரை நியமிப்பதில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் முழுமையான ஆதரவும் கிடைத்தது. 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு சிலரின் பெயர்கள் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டது. 

கட்சி பிளவுபடாது ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே இருந்தது. எனினும் எமது கொள்கையுடனேயே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். 

அதேபோல் எமது பிரதான கொள்கையுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும். இதில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இருந்து எமது திட்டங்களை நிறைவேற்ற  வேண்டும். 

எமக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் எம்மிடம் இந்த வாக்குறுதிகளை கேட்டுள்ளனர். 

ஆகவே அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். இதில் சகல  கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என அங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

பகிரவும்...