Main Menu

கொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனாவில் 6 மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸால், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்த மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம்

தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயற்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும். உலகின் பாதி அளவுக்கான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம். ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை. அமெரிக்கா, பிரேஸில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும், நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன’ என கூறினார்.

பகிரவும்...