Main Menu

சஜித் தலைவரானால் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பாரிய வெற்றி கிட்டும் – திஸ்ஸ

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிப்பதன் ஊடாக, பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி பாரிய வெற்றியடையக் கூடிய சந்தரப்பங்கள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக பேச்சு நடத்தி, காலத்தை வீணடிப்பதைவிட விரைவில் தீர்மானமொன்றுக்கு வரவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம்.

இதில் மாற்றமொன்று வரவேண்டும். கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும். ஆனால், இவை அனைத்தும் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

நான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளன். இந்தக் கட்சியிலிருந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இன்று கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரும்பான்மையானோர் கட்சித் தலைமைத்துவம் மாற்றமடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சஜித் பிரேமதாஸ மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த விடயத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

சஜித் பிரேமதாசவுக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டால், கட்சி சிறப்பான பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

தற்போது அவர் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இவரது செயற்பாடுகள் நாடாளுமன்றில் மட்டும் முடங்காமல், நாடளாவிய ரீதியாக விரியவடைய வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும்.

எனவே, இனியும் தாமதிக்காமல், சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம். இதன் ஊடாக பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி பெறக்கூடிய சாத்தியங்களும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்

பகிரவும்...