Main Menu

கிரீஸில் தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்!

கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் தலையை உரசும் அளவுக்கு தாழ்வாக பறந்துள்ளது.

கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது.

கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு விமானங்கள் தரையிறங்கும் போது, விமான இயந்திரங்களில் இருந்து வெளிப்படும் வேகமாக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடையவோ, உயிரிழக்கவோ நேரிடும் என்பதால் ஓடுதளத்தின் முன்பாக ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் ‘பிரிட்டிஷ் எயாவேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) ) ஸ்கியாதோஸ் விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக பறந்துள்ளது.

கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் வழக்கம் போல விமானத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். விமானம் மிகவும் தாழ்வாக பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பகிரவும்...