களமிறங்கும் எனது தீர்மானத்தில் சிறிதேனும் பின் வாங்க மாட்டேன்: சஜித் பிரேமதாஸ
குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சுகததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டும் என்று தற்போது அடிமட்டத்தில் இருந்து ஆதரவு குரல் எழும்பியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அனைத்து தகுதிகளும் எனக்கு உண்டு . ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதர கட்சிகளின் தீர்மானங்கள் அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாகும். ஆனால் அரசியல் களத்தில் நாட்டு மக்களுக்கு உண்மை நிலைவரங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
அரசியல் மற்றும் மக்கள் சேவைகளில் இருந்து மிக தொலைவில் உள்ளவர்களே இன்று மக்களாணையினை பெற முயற்சிக்கின்றார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்ல. எனது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கட்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்றி உயிர் தியாகம் செய்தார். அவர் வழியிலே நானும் அரசியல் பணியினை தொடர்ந்துள்ளேன். பல்லாயிரக் கணக்கான மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் அரசியல் தீர்மானங்கள் ஒருமித்து காணப்படும் போது கட்சித் தலைமைத்துவம் மக்களின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் அரசியல் அபிப்பிராயங்களை செயற்படுத்துவதில் தயக்கம் காட்டும் பின்னணியை அறிய முடியவில்லை.
மக்களின் அரசியல் தீர்மானமே நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாடு தழுவிய ரீதியில் தொடர் மக்கள் சந்திப்புக்கள் இடம் பெறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நோக்கம் ஒருபோதும் கிடையாது. இன்று பலருக்கு யதார்த்த அரசியல் நிலைமையும், கடந்து வந்த அரசியல் பாதைகளும் மறக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. நெருக்கடி வேளையில் பலமுறை பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட போது நான் மறுத்தேன். அதற்கு காரணம் பிரதமர் பதவிக்கு நான் தகைமையற்றவன் என்ற அர்த்தத்தில் அல்ல. அப்பதவியை பெற்றுக் கொள்ள கூடாது என்பதே ஆகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை ஆதரவுடனே பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஆகவே அவரே அப்பதவியை வகிக்க வேண்டும்.
குறுக்கு வழியிலோ சூழ்ச்சியினாலோ ஒருபோதும் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. மக்களின் ஆதரவு முழுமையாக காணப்படுகின்றது. மக்களாணையின் ஊடாகவே உயர் பதவியை பெறுவேன். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. தற்போது முன்னெடுத்துள்ள இப்போராட்டத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்க மாட்டேன்.
2015ஆம் ஆண்டு நாட்டில் பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டும் இந்நிலைமையே தொடரும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்கு சிறந்த அபிவிருத்திகளையே தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.