Main Menu

கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை!

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால்  முன்னெடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள இம் மாசு பொருட்களை அகற்றும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மிதக்கும் கடல் பிளாஸ்டிக் கழிவு போலல்லாமல், பெரும்பாலும் கடல் பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்கு அடியில் தங்குவதால் அவற்றை சுழியோடல் நடவடிக்கைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் பாரமற்றவையாக இருப்பதால், அவை கடலோரத்தில் பரவி சிக்கிக் கொள்கின்றன.

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்பறவைகள் என்பவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கிக்கொள்வதனால் அவை பெரும்பாலும் உயிரிழக்கின்றன. இதேவேளை, சில ஈரூடக வாழி இனங்கள் தங்கள் ஆயுட்காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

எதிர்கால சுற்றுச்சூழல் பேரழிவை மனதில் இருந்தி, கடலோரப் பகுதியின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டைச் சூழவுள்ள கரையோரங்களின் தூய்மையை பேணவும், கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் உயிரியல் பல் வகைமைகளுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும்
இவ்வகையான திட்டங்கள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினை திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் முதல் கடற்கரை வரை முன்னெடுக்க கிழக்கு கடற்படை கட்டளையாகம் எதிர்பார்த்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் சுழியோடும் படைவீரர்களினால் பெருமளவிலான கடல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் அகற்றப்பட்டன.

கரையோரங்களை சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கையில் திருகோணமலை பொலிஸ் குழுவினரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...