Main Menu

ஏழை-எளிய மக்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை

மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட பிறர் நலம் பார்த்து சேவை செய்யவேண்டும் என கிறிஸ்துமஸ் தின விழாவில் போப் ஆண்டவர் கூறினார்.

வாடிகனில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் குழந்தை இயேசு சொரூபத்தை போப் ஆண்டவர் முத்தமிட்ட காட்சி.வாடிகன்:

இயேசுபிரான் அவதரித்த தினமான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கொரோனா பரவலுக்கு இடையே வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிகா பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொண்டார்.

இதில் வழக்கத்தை விட குறைவான கிறிஸ்தவர்களே கலந்துகொண்டனர். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் குழந்தை இயேசுவின் சொரூபத்தை முத்தமிட்டு பிரார்த்தனை செய்தார். இதில் அவர் பேசியதாவது:-

ஏழைகளை நாம் கவுரவப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட பிறர் நலம் பார்த்து சேவை செய்யவேண்டும்.

இங்கு வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் அழகாக உள்ளன. இதைக் கடந்து நாம் ஏழை- எளிய மக்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அன்பின் இரவில் ஒரே ஒரு பயம் இருக்கட்டும். ஏழைகளை நாம் அலட்சியப்படுத்தினால் கடவுளின் அன்பை புண்படுத்துவதாகும், காயப்படுத்துவதாகும். ஏழைகளை இயேசு மிகவும் நேசிக்கிறார். தேவை உள்ளவர்களிடம் இயேசு இருக்கிறார். அவர்கள் மூலம் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார்.

தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதை அவர் விரும்புகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...