Main Menu

எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது- செல்வம்

எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கை இல்லாத சுயேட்சைக் குழுக்கள் வன்னி மண்ணில் அதிகம் நிறுத்தப்படிருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அலுவலக திறப்புவிழா நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாக எங்களுடைய தேசத்தில் பரிசோதனை முகாம்களும் சோதனைச் சாவடிகளும் முளைத்திருக்கின்றன. மணல் ஏற்றினாலும் சுட்டுக்கொல்லக்கூடிய வல்லமை இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சாதாரண பொதுமகன் எதுசெய்தாலும் சுடமுடியும் என்ற அதிகாரத்தை ஜனாதிபதி முப்படைக்கும் வழங்கி எமது மக்களை நசுக்கும் செயற்பாட்டை செய்துவருகின்றார்.

அதனைத் தட்டிக்கேட்பதற்கு கூட்டமைப்பால் மாத்திரமே முடியும். அதற்கு பல வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. எனவே கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கு நாம் எத்தணிக்கக் கூடாது. அரசாங்கத்துடன் வால்பிடிப்பவர்களை நீங்கள் தெரிவுசெய்ய வேண்டாம்.

இதேவேளை, தமிழ் பிரதேசம் என்று எங்குமே இல்லை என்றும் இலங்கையில் யாரும் எங்கும் வாழலாம் எனவும் பிரதமர் மஹிந்த சொல்கிறார். அதற்காகவே கூட்டமைப்பை பலவீனப்படுத்தி சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்காக கொள்கை இல்லாத சுயேட்சைக் குழுக்களை வன்னியில் களம் இறக்கியிருக்கின்றனர். தமிழர்களின் பூர்வீகத்தை உடைப்பதற்காக இந்த செயற்பாடு மேற்கொள்ளபடுகின்றது.

எனவே சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி எமது தேசத்திலே தனது கரங்களை நீட்டி செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்கக் கூடாது.

இதேவேளை, கூட்டமைப்பில் இருக்கின்ற புல்லுருவிகளை மக்கள் இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். களத்தை உருவாக்கிய விடுதலைப் புலிகள் தொடர்பாக மோசமான வார்த்தைகளை வெளியிலே சொன்ன சுமந்திரன் போன்றவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் தேர்தல் காலங்களிலேயே விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் நாம் பேசுவோம். அது எமது உரிமை. வரலாற்றைச் சொல்வதிலே நாம் தயங்கப்போவதில்லை. அதை எப்போதும் எங்கேயும் சொல்லுவோம்” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...