Main Menu

ஊரடங்கு தளர்வு ஒரு பரீட்சார்த்த முயற்சியே- வைத்தியர் சுகுணன்

ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகவே ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்று காரணமாக அண்ணளவாக இரண்டு மாதங்கள் இலங்கை முடக்கப்பட்டு அரசு இயந்திரம் மெதுவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முறையில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலை மாறி நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு காலடி எடுத்து வைக்கும் முதலாவது விடயம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

என்னைப் பொறுத்தளவில் கிடைக்கின்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொவிட்-19 தொற்றுநிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் அரசாங்கமும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாகவே முதலாவது நடவடிக்கையை தொடங்குகிறது.

இருந்தாலும், கொவிட்-19 அச்சுறுத்தல் இலங்கையில் முற்றுமுழுதாக நீங்கிவிடவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நாங்கள் நாளைய தளர்வுகளை அடுத்து மிகவும் அழுத்தமாக சூழலில் இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் நாளை போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இந்த போக்குவரத்துக்கள் எல்லாம் பொதுமக்களுக்கான தனிப்பட்ட விடயங்களைக் கொண்டுசெல்வதற்கான அல்லது உறவினர்களை பார்ப்பதற்காக, பொருட்களை வாங்கச் செல்வதற்கான, போக்குவரத்து நடைமுறைகளாக இருக்கப் போவதில்லை.

இது பொது உத்தியோகத்தர்களுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களுக்கான அல்லது பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய கடமைகளை ஆற்றுவதற்கு வருவதாகத்தான் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதுவும் அந்தப் போக்குவரத்து குறித்து விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பேருந்தில் 50 ஆசனங்களில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சமூக இடைவெளியான ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு ஆசனத்தில் ஒருவர் என்ற அடிப்படையில்தான் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

பொது நிர்வாக வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் தனியார் நிறுவனங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடைகள், சந்தைகள் திறக்கப்படவுள்ளன.

இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாகத்தான் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்குத் திரும்பும்” என அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...