Main Menu

உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலை நாட்டுமாறு மட்டக்களப்பில் போராட்டம்!

உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன.

கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றது.

‘ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான பிரகடனம் எங்கே?’, ‘அரசியல் யாப்பில் உயிர் வாழ்வதற்கான உரிமையினை கொடு’, ‘ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடு எங்கே’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

உலகில் வாழும் யாருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அரசாங்கமும் அரச உத்தியோகத்தர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டது.

அனைவரினதும் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற முன்நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

பகிரவும்...