Main Menu

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை: அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது

சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கண்காணிப்பகம் கோரியுள்ளது.

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்படி தீர்ப்பாயத்தை அமைக்க கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுந்தொனியில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நியமனம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.

இதனால் உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...