Main Menu

எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் இடை மனுதாரராக இணைந்துகொள்ளுமாறு அனுமதி கோரியே எம்.ஏ.சுமந்திரனால் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி, பழைய முறைமைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற கட்டளையை பிறப்பிக்குமாறு எம்.ஏ.சுமந்திரனின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேனவினால் உயர்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு நாளை மறுதினம் உயர் நீதிமன்றில் ஆராயப்படவுள்ளது.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து விவாதம் மேற்கொள்வதற்காக தனிநபர் பிரேரணை ஒன்றையும் எம்.ஏ.சுமந்திரன்  சபாநாயகரிடம் கையளித்துள்ளார் .

பகிரவும்...