Main Menu

இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: சீனா

சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாட்டின் போது உரையாற்றுகையிலேயே வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவை நோக்கி முன்வைத்த கடுமையான கொள்கைகளை ஜோ பைடன் நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது மாற்றவோ எங்களுக்கு விருப்பமில்லை. அமைதியான சகவாழ்வு மற்றும் அமெரிக்காவுடன் பொதுவான வளர்ச்சியை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

அதேபோல் அமெரிக்காவும் சீனாவின் முக்கிய நலன்கள் தேசிய கௌரவம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை மதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசியலமைப்பை கறை படுத்துவது தாய்வானின் பிரிவினைவாத சக்திகளின் தவறான சொற்களையும் செயல்களையும் ஆதரிப்பது ஹொங்காங், திபெத் மற்றும் ஸின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சீனாவின் பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களை நீக்குவது சீனாவின் வர்த்தக நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை நீக்குவது சீனாவை பகுத்தறிவற்ற முறையில் அடக்குவதை கைவிடுவது ஆகியவற்றுடன் அமெரிக்கத் தரப்பு தனது கொள்கைகளை சீக்கிரம் சரி செய்யும் என்று நம்புகிறோம்’ என கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது.

வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் தீரா பகையை உருவாக்கியது.

பகிரவும்...