Main Menu

இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: செல்வம் எம்.பி.

தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டவைகளாக இருக்கின்றன.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு எமது தேசிய இனம் வாக்களித்தது. அதேநேரத்தில் மற்றொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது.

எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சினைகளையும் மறக்கமுடியாத வடுக்களாக இன்றும் சுமந்துகொண்டிருப்பதை இந்த தேர்தலில் உறுதி செய்துள்ளோம்.

ஆகவே, ஆட்சியாளர்கள் நிச்சயமாக இதற்கு பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லியே ஆவார்கள். எனவே, தேர்தல் முடிந்த இந்த சூழலில் எமது மக்கள் ஒரு அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அச்சப்படத் தேவையில்லை.

எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள் நாங்கள். எனவே அந்த நிலைக்கு செல்லும் அளவுக்கு எதுவும் ஆகாது. நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...