Main Menu

இந்தியர்களின் தேவையைத் தாண்டியே மருந்து ஏற்றுமதி இருக்க வேண்டும்- ராகுல் வலியுறுத்து

இந்தியர்களின் தேவைகளுக்கு கையிருப்பை வைத்துவிட்டே ஏனைய நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “நட்பு என்பது பதிலடி குறித்த‌து அல்ல. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் உதவ வேண்டும்.

ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்குப் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மருந்துத் தேவையை கருத்திற்கொண்டு பரசிற்றமோல், ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இதனால் அமெரிக்காவால், கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், முன்னரே கேட்டிருந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...