Main Menu

ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!

அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...