Main Menu

ஆந்திர முதல்வரைச் சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்ப நேற்று இடம்பெற்ற நிலையில் கிருஷ்ணா நதிநீரைக் கூடுதலாக விடுவிக்குமாறும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோதாவரி ஆற்றில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வழியாக காவிரிக்கு உபரிநீரைத் திருப்பும் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயற்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இத்திட்டம் மூலம் தமிழகத்துக்கு 700டிஎம்சி நீரைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தைச் செயற்படுத்த ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இரு மாநிலங்களிடமும் திட்டத்துக்கான ஒத்துழைப்பைப் பெற தமிழக அரசு தற்போது முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள் ஆந்திர முதல்வரை சந்தித்துள்ளனர். கோடைகாலத்தில் சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்கக் கூடுதலாக கிருஷ்ணா நதியூடாக 3 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பையடுத்து, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை இன்று சந்திக்கவுள்ள தமிழக அமைச்சர்கள் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11,257 மில்லியன் கன அடியில் தற்பாது 6,157 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. என்றாலும், தினசரி விநியோகம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் தொடர்ந்து நீர் இருப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா நீரைக் கூடுதலாகப் பெற தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஓகஸ்ற் 9ஆம் திகதி ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக  அமைச்சர்கள் சந்தித்து கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், உடனடியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அப்போது முதல் கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரத்து 145 மில்லியன் கன அடி நீர் சென்னைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...