Main Menu

ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை : ரவிகரன்

அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு ரவிகரன் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 60 வெள்ளையர்களை பண்டார வன்னியன் ஒரே வாள்வீச்சில் சாய்த்ததாக கூறப்படும் கற்பூரப்புல் வெளியிலும் தனது அஞ்சலிகளைச் செலுத்தியதனையடுத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழனுடைய வீரம் செறிந்த தினம் இன்றாகும், அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பண்டாரவன்னியன் போரிட்ட பல சம்பவங்களில் இன்றைய நாள் மிக முக்கியமான நாளாகும்.

இந்த நாள் முல்லைத்தீவிலே அமைந்திருந்த அன்னியருடைய கோட்டைக்குள்ளே மாவீரன் பண்டாரவன்னியன், தனது படைகளுடன் புகுந்து, அன்னியருடைய ஆயுதங்களைக் கைப்பற்றி எடுத்துவரும் அளவிற்கும், பல அன்னிய எதிரிகளை கொண்றொழித்த தினமாகவும் இன்றைய நாள் நினைவுகூரப்படுகின்றது.

ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் வந்த பல அன்னிய எதிரிகளை வீழ்த்தி தமிழனுக்குப் பெருமை சேர்த்த தமிழ் மறவர்களை நினைவுகூரும் நாளாக இன்றையநாள் காணப்படுகின்றது.

இன்றுகூட அன்னிய ஆதிக்க சக்திகள் எங்களுடைய தமிழ் பூர்வீக நிலங்களை, பறித்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. 

நிச்சயமாக இவ்வாறு ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் மீட்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...