அயோத்தி விவகாரம்: தொடர் விசாரணைகளை ஆரம்பித்தது உயர்நீதிமன்றம்!
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது.
அத்துடன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எதிர்வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளார். இதன்காரணமாக தலைமை நீதிபதியின் ஓய்விற்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கபட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலியுறுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட குழு அரசியலமைப்புச் சட்ட அமர்வில், இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.
அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.
குறித்த குழு அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்ததுடன், இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து குறித்த வழக்கில் தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக இன்று முதல் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.