Main Menu

அஜித் ரசிகர்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கை

வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் பாடல்கள் பற்றி சமீபத்தில் தகவல் தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ட்விட்டரில் இன்று தெரிவித்ததாவது: வணக்கம். வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும் என்றார்.

இந்நிலையில் வலிமை அப்டேட் குறித்து நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பகிரவும்...