22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
‘Vinivida’ அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி சிரால் லக்திலக மற்றும் இளம் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவொன்றினால் இந்த சட்டமூலத்துக்கு எதிராக அண்மையில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக, சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன மற்றும் பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம், சட்ட மற்றும் அரசியல் விவாதங்களுக்கு உட்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான ஏற்பாடுகளும் அடங்கும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 67-ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63-லிருந்து 65-ஆகவும் உயர்த்துவதற்கு இந்த சட்டமூலம் வகை செய்கிறது.
வழக்குகள் மீதான தாமதம் மற்றும் தேக்கநிலை ஆகியவற்றைச் சரிசெய்வது உட்பட, நீதித்துறையை வலுப்படுத்துவதையும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதையுமே முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், முன்மொழியப்பட்ட மாற்றங்கள், குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மக்களின் நீதித்துறை அதிகாரத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியலமைப்பு ரீதியான தாக்கங்கள் குறித்து மனுதாரர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
