வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்
இலங்கையில் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான ‘100 நாட்கள் செயல்முனைவின்’ நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.
