Main Menu

வடக்கு – கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் பிரதமரைச் சந்தித்த ‘வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் குரல்’ அமைப்பின் பிரதிநிதிகள் இந்த மனுவை வழங்கினர்.

யாழ்ப்பாணம் (வலிகாமம் வடக்கு, பலாலி, மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்புலவு) மற்றும் மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் காணிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காதது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.