Main Menu

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் கடுமையான இதய நோயைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்கக் கோரும் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி மனோரி சலே, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதியிட்ட அக்கடிதத்தில், தனது கணவரை தேசிய மருத்துவமனையின் தீவிர மருத்துவக் கண்காணிப்பிலிருந்து அகற்றி மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் காவலுக்கு ஒப்படைப்பது அவரது உயிருக்கு உடனடியாகப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர் தடுப்புக்காவலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7 ஆம் திகதி சுரேஷ் சலே மருத்துவ சிகிச்சைக்காகச் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ச்சியான இதயச் செயலிழப்பு மற்றும் கடுமையான உடல் பலவீனம் காரணமாக அவருக்குச் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தற்சமயம் அவருக்குச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டப்படி நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தங்களது குடும்பம் தயாராக இருப்பதாகவும், எனவே தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியான பிறகு அதனை மீண்டும் நீட்டிக்க வேண்டாம் என்றும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.