Main Menu

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்காக இணையவழியில் (Online) ரயில் பயணச்சீட்டுகளை வழங்கும் புதிய வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் எவ்விதத் தடங்கலுமின்றித் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் இவ்வேவையைத் தடையின்றி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச துறை ஊழியர்களுக்கான இணையவழி ரயில் பயணச்சீட்டு சேவை கடந்த மாதம் வெற்றிகரமாகச் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப் பட்டைகளை (Seat belts) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவைச் சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சிகளை வழங்குவதோடு, நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை (Helmets) அணிவது கட்டாயமாக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இருசக்கர வாகனங்களுக்கெனத் தனிப் பாதையை (Dedicated lane) அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.