Main Menu

மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த மாதம் 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், அன்றையதினம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.