Main Menu

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 28 ஆம் திகதி காலை தேர் உற்சவமும், மறுநாள் 29 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா நடைபெற்று , மாலை கொடியிறக்கம் நடைபெறும்.

மகோற்சவ காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் , மக்களுக்கான சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு சாரணர்கள் , சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினர் உள்ளிட்டவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன், மகோற்சவ காலத்தில் 42 படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் , விசேட போக்குவரத்து சேவைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

அத்துடன் பக்தர்களுக்காக குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை என்பவையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.