ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்
ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது ஈரான் – ரஷ்ய இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஓமானுக்கான விஜயங்களைத் தொடர்ந்து ரஷ்யா சென்றுள்ள Araghchi, போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
நீண்டதூரப் பயணம் என்பது நேர விரயம் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானியர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தற்போது தற்காலிகப் போர்நிறுத்த நிலையில் உள்ள போதிலும், ஈரானால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த எரிசக்தி நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றங்களுக்குத் தீர்வு காண ரஷ்யா ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயற்படும் என சர்வதேச அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.
