சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அங்கு துருக்கி படைகள் இருக்கும் – ஜனாதிபதி எர்டோகன்
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும்வரை அங்கு துருக்கிபடைகள் இருக்கும் என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி ஜனாதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும், வடக்குப் பகுதியிலும் சில இடங்களைக் கைப்பற்றிய துருக்கிப் படைகள் சிரியாவில் முகாமிட்டுள்ளன.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.
ஜனாதிபதி ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும், கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின்றன.
ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறமை காரணமாக சுமார் 70 சதவீதப் பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.