கோத்தபாயவால் தமிழ் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை!- திஸ்ஸ விதாரண
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்கப்படுவர் என ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலித்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை.
மாறாக சகலருக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி பொதுச்செயலாளரும் ஆளுநருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்றால் வெள்ளை வேன் கலாசாரம் உருவாகும் என்று போலித்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
அது மட்டுமல்லாமல், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இரண்டு நபர்களை அழைத்து வந்து கோத்தபாய ராஜபக் ஷவின் உத்தரவின் பேரிலேயே வெள்ளை வேனில் தமிழ் மக்களை கடத்திச்சென்று கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
தற்போது அது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் சாரதிகள் என சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் இறுதியில் உண்மை தெரியவரும்.
கோத்தபாய ராஜபக் ஷ இனவாதி அல்ல. தான் எதிர்பார்த்தளவு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையென்றாலும் அம்மக்களை அரவணைத்து நாட்டை அபிவிருத்தி செய்வேன் என அவர் பதவியேற்ற தினத்தில் கூறியது வரவேற்கக்கூடிய விடயம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி மூன்று பிரிவுகளாக செயற்படுவதால் பொதுஜன முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.