பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்பு- வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
பேரிடர் மீட்புக்குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்கப்பட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆழ்துளை கிணற்றில் இழந்து துர்நாற்றம் வீசியதால் குழந்தை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது. குழந்தை சுஜித்தை மீட்பதற்கு, மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தவரின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன. அதேபோல் வெளியே எடுக்கப்பட்ட உடலை எப்படி காண்பிக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன. கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பிறகு, இறந்தவர்களின் உடல்களை காண்பிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதால் தமிழகத்தின் தென்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. உள்மாவட்டங்களில் திண்டுக்கல் போன்ற இடங்களிலும் மழை பெய்கிறது.
எனவே, முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.