Main Menu

72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.

Update- புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன

புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு அவரது மகன் சரன் இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றார்.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பண்ணைத் தோட்டத்திலுள்ள அவரது வீட்டிலேயே தற்போது, இறுதிச் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும், அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வருகைதந்து  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் அவரது மறைவுக்கு பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல், சற்று நேரத்தில் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி.யின் இறுதிக் கிரியை இன்று

சென்னையில் காலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், திருவள்ளூர்- தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் இன்று (சனிக்கிழமை)  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி, அதில் இருந்து மீண்ட நிலையில்,  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல், திருவள்ளூர்- தாமரைப்பாக்கத்தில் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், எஸ்.பி.பி. உடல் இறுதிச் சடங்கிற்காக, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திற்கு இன்று எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரசிகர்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளதாகக் கருதி நேற்று மாலையே அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தாமரைப் பாக்கத்தில் அஞ்சலி செலுத்த மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் 500 பொலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...