Main Menu

60 வருடகால போராட்டங்களில் பெறமுடியாதவற்றை ஒருசில இரவுகளில் பெறமுடியாது- டெனீஸ்வரன்

30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்திலும் 30 வருடங்கள் அரசியல் போராட்டத்திலும் பெறமுடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

இருந்தாலும் ஒரு தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போது இருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இன்று (சனிக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “எமது அரசியல் போராட்டமானது நீண்ட தூர பயணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது. இதைத்தான் வரலாறுகளும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஒருசில இரவுகளில் எமது உரிமைகளை அடைந்து விடுவோம் என்று எவரும் நம்பமுடியாது. எதிர்பார்கவும் முடியாது.

இதனை இந்த தீபாவளி அல்லது பொங்கலுக்குள் பெற்றுத் தருகின்றேன் என்று கூறுகின்ற விடயமும் ஒரு பொருத்தமாக அமையும் என்று நான் கருதவில்லை.

ஆனால், அவ்வாறு அவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக ஒருசில இரவில் அந்த தீர்வுகள் வந்துவிடும் என்று மக்களாகிய நாம் நம்புவது ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. எனவே, எமது அரசியல் ரீதியான போராட்டம் என்பது ஒரு நீண்ட தூர பயணம் என்பதை நாம் எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

30 வருடங்கள் ஆயுதப் போராட்டதிலும் 30 வருடங்கள் அரசியல் போராட்டத்திலும் பெற முடியாதவற்றை ஒருசில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது.

இருந்தாலும் ஒரு தூர நோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போது இருக்கின்றோம். அந்தவகையில் இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பாரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.

இந்நிலையில், எனக்குக் பின்னால் இருக்கின்ற என்னுடைய மக்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பங்களிடம் நான் வேண்டுகின்ற அன்பான வேண்டுகோள் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தலைவரினால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பில் பல அதிருப்திகள் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த விடயங்கள் பேசி உடனடியாக தீர்வு காணப்படவேண்டியவை.

எல்லோறையும்விட கூட்டமைப்பில் அதிக அதிருப்திகள் குற்றச்சாட்டுக்கள் எனக்கு இருக்கின்றன. எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்தவர்கள் இன்று புனர்வாழ்வு பெற்று வந்திருக்கின்றார்கள். இவர்களை எமது அரசியல் ரீதியான இந்த பயணத்தில் நாம் இணைத்துக் கொள்ளவில்லை என்பது பாரிய குறைபாடாக இருக்கின்றது.

எனவே, எமது தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக எமது அரசியல் ரீதியான பயணத்தில் அவர்களையும் உள்வாங்க வேண்டும்.

இவ்வாறு செயற்படுவது எமது மக்களை சிதறாமல் ஒன்று சேர்க்கக்கூடிய சக்தியாக அமையும். ஆகவே இதை விளங்கியவர்களாக இம்முறை தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தமிழ் தேசிய கூட்டமைப்பை அதிக ஆசனங்களோடு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...