42,791 இறப்புக்களுடன் உலகில் இரண்டாவது மிக அதிகமான இறப்புகளை பதிவு செய்த நாடாக பிரேசில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 42,791 இறப்புக்களுடன் உலகில் இரண்டாவது மிக அதிகமான இறப்புகளை பதிவு செய்த நாடாக பிரேசில் பிரித்தானியாவை முந்தியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் நேற்றுமட்டும் 890 புதிய இறப்புகளைப் பதிவாகியுள்ளதுடன் இதுவரை 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையை பிரேசில் அறிவிப்பதை நிறுத்தியதை அடுத்து அரசாங்கம் நாட்டில் உண்மையான அளவை மறைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்காமை போன்ற அலட்சியங்கள் காரணமாக கொரோனா தொற்று அங்கு மேலும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.