Main Menu

25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது.

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

அதன்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரெயில் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது.

50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.  தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார். 

இந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. சென்னை மக்களின் தாகம் தீர்க்க வந்த முதல் குடிநீர் ரெயில் என்பதால், அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரெயில் மூலம் வந்துள்ள தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

பகிரவும்...