Main Menu

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது.

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.

பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது.

இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.