Main Menu

“ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பில்லை”

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கோத்தாபய ராஜபக்ஸ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே குற்றம்சாட்டியிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ஸ அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தனக்கும் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏதும் கிடையாது எனவும் அவரது திருமணத்தில் ஒரு விருந்தினராகவே பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் தோன்றியுள்ள நிலையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபாய் பங்குகள் கிடைத்தன என விசாரணை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனையடுத்து இந்த விடயம் குறித்து விசாரிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...