ஸ்பெயின் கடல் பகுதியில் 3 தொன் கொக்கெய்னுடன் நீர்மூழ்கி கப்பல் கண்டு பிடிப்பு!
ஸ்பெயின் நாட்டின் கடல்பகுதியில் 3 தொன் கொக்கெய்ன் போதைப் பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலை ஸ்பெயின் அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறைபிடித்தனர்.
அதில் சுமார் 3 தொன் கொக்கெய்ன் போதைப்பொருட்கள் இருந்துள்ளன. அதேவேளை, கப்பலின் இருந்த இரண்டு மாலுமிகளையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் வருவதை அறிந்த கப்பலின் ஊழியர்கள் கப்பலை முழுமையாக நீரில் மூழ்கச் செய்ய முயற்சித்துள்ளனர். அதை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அசாதாரண வானிலையால் அந்த முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது என ஸ்பெயின் நாட்டின் கலிசியா பிரதேச பிரதிநிதி ஜேவியர் லோசார்ட்சா தெரிவித்துள்ளார்.
20 மீட்டர் நீளமுடைய அந்த நீர்மூழ்கிக் கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து வந்தாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்தக் கப்பல் கொலம்பியா அல்லது போர்த்துக்கல் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஈக்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் நாளேடுகள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.