Main Menu

தென்கொரியாவில் பிரபல பொப் பாடகி மர்மாக உயிரிழப்பு!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பொப் பாடகியான கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக கூறும் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

28 வயதான தென்கொரிய பாடகி கூ ஹரா, சர்வதேச அளவில் பிரபலமான, பெண்களை மட்டுமே கொண்ட ‘காரா’ என்ற பொப் இசைக்குழுவில் உறுப்பினராக பங்கேற்று வந்தார்.

இந்த இசைக்குழுவின் சார்பில் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடல்களை பாடி பிரபலமாகியிருந்தார்.

அத்துடன் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, தாமாகவே பாடல்களை வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு தென்கொரியாவில் பாரியளவில் ரசிகர் பட்டாளமே இருந்தது.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கூ ஹராவை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் தனது முன்னாள் காதலர் தன்னை ஆபாசமாக காணொளி பதிவு செய்து வைத்துக்கொண்டு அச்சுறுத்துவதாக கூ ஹரா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான கூ ஹரா இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். கடந்த மே மாதம் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு தனது ரசிகர்கள் அளித்த ஆதரவு மற்றும் உற்சாகத்தால் அதில் இருந்து மீண்டு வந்த கூ ஹரா தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் கூ ஹரா பிணமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மர்ம உயிரிழப்பு குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கூ ஹரா எப்படி உயிரிழந்தார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூ ஹராவின் நெருங்கிய தோழியும், சக பொப் பாடகியுமான சுல்லி, கடந்த மாதம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...