Main Menu

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவரை கொவிட் 19சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 200பேரிடம் எழுமாறாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் அடங்கி இருந்தனர்.

இந்நிலையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 199பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புளியங்கூடல் பகுதியில் 2வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை மூடப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...